June 10, 2011

வேற்று மொழி நடிகர்கள்

திடீரென ஒர் படத்திற்க்கு அறிவிப்பு வரும். இந்தப் படத்தில் வேற்று மொழி படங்களில் புகழ்பெற்ற ஒரு நடிகர் ஒருவர் நடிக்கிறார் என்று. இது ஜஸ்டிஸ் பார்ட்டி காலத்தில் இருந்தே இருந்து வருகிறது. அந்த கதாபாத்திரம் சிலசமயம் ஹீரோவிற்க்கு இணையாகவும் அல்லது கதை திருப்பத்திற்க்கு முக்கியமானதாகவும் கூட இருக்கும்.

சத்யம் – உபேந்திரா
மலைக்கோட்டை – தேவராஜ்
சர்வம், கச்சேரி ஆரம்பம் - சக்கரவர்த்தி
வேட்டைக்காரன் – ஸ்ரீஹரி
ராஜ்ஜியம் – திலீப்
12 பி – சுனில் ஷெட்டி
தீனா - சுரேஷ்கோபி
என பல படங்களைச் சொல்லலாம்.

ஏன் இந்த கேரக்டர்களுக்கு இவர்கள் இவ்வளவு முக்கியமா? என்று பார்த்தால் அப்படி ஒன்றும் அது பெரிய அப்பாடக்கர் கேரக்டராய் இருக்காது. வேட்டைக்காரனில் ஸ்ரீஹரி நடித்த போலிஸ் கேரக்டரோ அல்லது மலைக்கோட்டையில் தேவராஜ் நடித்த கேரக்டரோ நாசர், பிரகாஷ்ராஜ் வகையறாக்கள் போகிற போக்கில் ஊதி விட்டு போய்விடுகிற கேரக்டர்கள் தான். அப்புறம் ஏன் இவர்களைப் பிடித்து தொங்க வேண்டும்?

என் நண்பர் ஒருவர் சொல்லுவார், ஒரே பழிவாங்குற கதைதான். ஆனா அதையே ரஜினிய வச்சு, விஜய்காந்த வச்சு, விக்ரம வச்சு, விஜய்ய வச்சு, சூர்யாவ வச்சுன்னு ஆளை மட்டும் மாத்தினாலே போதும். மக்கள் ஏத்துப்பாங்க என்பார். இது காதல் கதை படங்களுக்கும் பொருந்தும்.
அப்படி மக்களுக்கு பழகின கதையா இருந்தாலும் புது முகமா இருந்தா ஆர்வமா பார்ப்பாங்க என்பது அவர் தியரி. யோசித்துப் பார்த்தால் அது சரிதான் என்று படும்.

ராம நாராயனன் அவர்களிடம் இருப்பது ஒரே ஒரு அம்மன் கதைதான். ஆனால் அவர் ஒவ்வொரு முறை எடுக்கும் போது அம்மனாக நடிக்கும் நடிகையை மாற்றிவிடுவார். (பாளையத்தம்மன் – மீனா, ராஜகாளியம்மன் – ரம்யா கிருஷ்ணன்). இது கவர்ச்சி நடிகைகள் விஷயத்தில் கட்டாயமான ஒன்று. படம் என்று ஒன்று எடுத்தால், டைட்டில் என்று ஒன்று இருக்குமோ இருக்காதோ ஆனால் ஒரு ஐட்டம் சாங் இருக்க வேண்டும் என்ற ரூல் இருந்த காலத்தில் இருந்தவர் சில்க் ஸ்மிதா. அவரை மிஞ்சிய பேரழகி உண்டா? ஆனால் அவர் உச்சத்தில் இருக்கும்போதே அனுராதா, டிஸ்கோ சாந்தி, பபிதா என பல கவர்ச்சி நாயகிகளை களத்தில் இறக்கியவர்கள் நம் ஆட்கள். அவர்களுக்கு எதுவும் புதிதாக இருக்க வேண்டும்.

இயக்குநர் பி வாசு ஒரு பேட்டியில் சொல்லியிருப்பார். மசாலா படங்களிலேயே அதிகபட்சம் 10 கதைகள் தான் இருக்கும். 0 வில் இருந்து 9 வரை. அடுத்து 11ஆவது கதையென்று போனால் அதில் 0வும் 1 ம் கலந்திருக்கும் என்று. வேட்டைக்காரன் படத்தையே எடுத்துக் கொள்வோம். சென்னையில் இருக்கும் ஒரு தாதாவை தமிழ்நாட்டின் மற்றொரு பகுதியில் இருந்து வந்து வெல்லும் வீரனின் கதை. இது மாதிரி விஷாலே நான்கு படம் நடித்து விட்டார். ஆனால் வெரைட்டி காண்பிக்க வேண்டுமே? ஹிரோயின், ஹீரோவோட அப்பா அம்மா, ஃப்ரண்ட்ஸ், வில்லன் மட்டும் மாத்தினா போதுமா? கதைக்கு திருப்பம் கொடுக்க ஒரு இணை பாத்திரம் வேணுமே என்கிற போதுதான் இம்மாதிரி பிரெஷ்ஷான பேஸ் பிடிப்போம் என்று வேற்று மொழிகளில் இருந்து ஆட்களை பிடித்து வருகிறார்கள். இதில் வணிக லாபமும் ஒளிந்திருக்கிறது.

ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரம் போர்ஸாக இருக்க வேண்டும், அந்த பாத்திரம் வரும்போதே ஒரு கெத்தான பீல் கிடைக்க வேண்டும் எனும் போது இம்மாதிரி வேற்று மொழி பிரபலங்களை உபயோகப் படுத்துகிறார்கள். நினைத்துப் பாருங்கள் சத்யத்தில் உபேந்திரா கேரக்டருக்குப் பதில் நாசரோ, பிரகாஷ் ராஜோ நடித்திருந்தால் அந்தப் படத்தின் ஒரே ஆறுதலும் இல்லாமல் போயிருக்கும். 12 பி யில் முறைமாமன் கேரக்டர் தான் ஆனால் அதற்கு ஜீவா தன் செல்வாக்கைப் பயன்படுத்தி சுனில் ஷெட்டியை கூட்டி வந்திருப்பார். ஏன் எத்தனை அமெரிக்க ரிட்டர்ன் கேரக்டர் நடிகர்கள் இருக்கிறார்களே? அவர்களை உபயோகப் படுத்தியிருக்கலாமே?

இன்னொரு முக்கிய காரணம், அந்த சப்போர்டிங் கேரக்டர்களுக்கு என்று தனிப்பட்ட குணாதிசயங்கள் அல்லது அது தனித்து தெரிவதற்கான சீன்களை உருவாக்கும் திறமை குறைவு அல்லது சோம்பேறித்தனம். கதாநாயகிகளுக்கே கேரக்டரைசேஷன் சரியாக செய்வதில்லை. இதில் இவர்களுக்கு வேறு கேரக்டரை சேஷனா என்று பெரும்பாலோனோர் விட்டுவிடுகிறார்கள். ஒவ்வொரு பாத்திரத்தையும் வித்தியாசமாக படைத்தால் இருக்கிற நடிகர்களே போதுமே?

நேர்மையான போலிஸ், கெட்ட அரசியல்வாதி, நல்ல அண்ணன் என்று ஒரே ஒரு பரிமாணம் கொண்ட கேரக்டர்களை உருவாக்குவதால் தான் வெரைட்டி காண்பிக்க புது ஆட்களை தேட வேண்டியிருக்கிறது. பேட் மென் வில்லன் போல வித்தியாச பரிமாணங்களில் இந்த இணை கேரக்டர்களை உருவாக்கும் போது தமிழ்சினிமா இன்னும் சுவராசியப்படும்

June 09, 2011

ஹீலே – கில்லியும் ஹர்பஜன் அஷ்வினும்

இயான் ஹீலே - பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆஸி அணியில் இருந்தும் ஒரு உலகக்கோப்பை வெற்றி அணியிலும் இடம்பெறாதவர். அதே போல் எந்த ஆஷஸ் தோல்வி அணியிலும் இடம் பிடிக்காதவர். நூறு டெஸ்டுகளை கடந்தும் நல்ல பார்மிலேயே இருந்தவர். எந்த ஒரு வீரரையும் புள்ளி விபரத்தால் அளவிடக்கூடாது என்பார்கள். 96ல் உலக்கோப்பையை கலக்கிய ஜெயசூர்யா எடுத்தது 300க்கும் குறைவான ரன்களே. ஆனால் 96 உலக்கோப்பையைப் பற்றி பேசினாலே அவரைத் தவிர்க்க முடியாது. ஏனென்றால் அவர் ஏற்படுத்திய தாக்கம் அப்படி.

அதுபோலவே 88 முதல் 99 வரை ஹீலே ஆடிய டெஸ்டுகளில் பல ஆட்டங்களில் அணியை தோல்வி அடையாமல் காப்பாற்றியுள்ளார்/ வெற்றிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

கடைநிலை ஆட்டக்காரர்களுடன் பலமுறை இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் அடித்த 4 சதம், 22 அரை சதத்தில் பெரும்பாலானவை அணிக்குத் தேவையான போது அடிக்கப்பட்டவையே.

இதைவிட அவர் கீப்பிங் திறமைதான் பெரிதும் பேசப்பட்ட ஒன்று. வார்னேவின் பந்துவீச்சுக்கு அவ்வப்போது வந்து ஆலோசனை சொல்லுவார். உண்மையிலேயே ஏதாவது சொல்வாரா அல்லது சும்மா வந்து காதைக் கடிப்பாரா என்று தெரியாது. ஆனால் பேட்ஸ்மென்னுக்கு கிலி ஏற்பட்டு விடும். சும்மாவே வார்னே பாலை விளையாட முடியாது, இதில் நம்ம வீக்னெஸ்ஸை வேற கண்டுபிடுச்சு சொல்லிட்டானோ என்று இரண்டு மனநிலையில் ஆடி அவுட்டாகிவிடுவார்கள். (நல்ல உதாரணம் பாகிஸ்தானின் பசத் அலி).
இந்த சமயத்தில்தான் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் அடி வெளுத்துக் கொண்டும், நன்கு கீப்பிங் செய்துகொண்டும் இருந்த கில்கிறிஸ்ட் தேர்வாளர்களின் கண்ணில் பட்டார். அவ்வப்போது ஒருநாள் போட்டிக்கான வாய்ப்புகளும் வழங்கப்பட்டன. ஆஸ்திரேலியாவின் தென்னாப்பிரிக்க தொடரில் (1997) அவர் ஒரு ஆட்டத்தில் அடித்த 77 ரன்கள், பின் தொடர்ந்த ஆட்டங்களில் அவரது வேகமான ஆட்டம் ஆகியவை ஹீலேயின் ஒருநாள் அணி இடத்தை ஆட்டம் காணச் செய்தது. அந்த காலக் கட்டத்தில் ஆஸி பல ஒரு நாள் போட்டிகளில் தோற்றுக் கொண்டிருந்தது, அதிரடி ஆட்டக்காரர்கள் குறைவினால். எனவே ஹீலேயின் ஒருநாள் போட்டி இடத்தை கில்லி பிடித்துக்கொண்டார். ஆனாலும் டெஸ்ட் போட்டிகளில் ஹீலேயே முதல் சாய்ஸாக இருந்தார். நன்றாகவும் விளையாடிக் கொண்டிருந்தார். ஆனால் தொடர்ந்து கில்கிறிஸ்ட் ஒருநாள் போட்டிகளில் கலக்க, தேர்வாளர்கள் ஹீலேயே கழட்டிவிடத் தீர்மானித்தார்கள்.

ஹீலே ஆஸியில் ஆடிய கடைசி டெஸ்டில், ஒளிபரப்பில் ஆட்டத்தை விட அதிகம் ஒளிபரப்பப் பட்டவை ஹீலி ஆதரவாளர்களின் ஆதரவு அட்டை வாசகங்கள்தான். தேர்வாளர்களின் பிறப்பை சந்தேகப்படும் வாசகங்கள் உட்பட ஆஸ்திரேலிய போர்டை கேவலப்படுத்தும் பல வாசகங்கள் அதில் இடம்பிடித்திருந்தன. ஆனாலும் அசராமல் அவரைக் கழட்டி விட்டது ஆஸி போர்டு.

பின்னர் கில்லியின் அசகாய ஆட்டத்தால் அவை எல்லாம் அடங்கிப் போயின.

ஒரு அணியில் ஓர் இடத்திற்கு தற்போதுள்ளவரை விட திறமையானவர் தென்பட்டால் பழைய வரலாறைப் பார்க்கக் கூடாது என்பதற்கு இது ஒரு உதாரணம். இதேபோல் பலமுறை ஆஸி முடிவெடுத்துள்ளது.

இப்போது இந்திய அணியிலும் இதேபோல் ஆப் ஸ்பின்னருக்கான ஓரிடத்துக்கு சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ஹர்பஜனின் விக்கெட் எடுக்கும் திறமை கேள்விக்குறியாய் உள்ளது (முக்கியமாய் டெஸ்ட் போட்டிகளில்).

அஷ்வின், கெய்லின் விக்கெட்டை ஐபிஎல் 4 குவாலிபையரிலும், இறுதிப் போட்டியிலும் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு காரணமானார். ஐபிஎல் 3 பைனலிலும் சச்சின் விக்கெட்டை இக்கட்டான நேரத்தில் கைப்பற்றி வெற்றிக்கு உதவினார். சாம்பியன் கோப்பையிலும் தரமான பந்துவீச்சு.
சென்ற தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடரிலும் நல்ல பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.

ஆனால் தேர்வாளர்கள் குழு மற்றும் போர்டு ஹர்பஜனையே முதல் சாய்ஸாக வைத்துள்ளது. அஷ்வின்னுக்கு வாய்ப்பை சரியாக தர இன்னும் யோசித்துக் கொண்டே இருக்கிறது. எப்போது ஆஸியைப் போல் நாமும் முடிவெடுப்பது?