December 22, 2011

செகண்ட் ஷோ நிறுத்தப்படுகிறதா?

மற்ற பகுதிகளில் எப்படியோ, ஆனால் எங்கள் ஏரியாவில் செகண்ட் ஷோ தான் குடும்பத்தோடு மக்கள் வந்து பார்க்கும் காட்சியாக இருந்தது. அதுவும் மறு வீட்டுக்கு வரும் மாப்பிள்ளையை பெண் வீட்டார் ஒரு படத்துக்காவது நிச்சயம் அழைத்துச் செல்வார்கள். இரவு உணவை ஒன்பது மணி அளவில் முடித்துவிட்டு சீவி சிங்காரித்து மாலையிலே கட்டி ஈரத்துணியில் சுற்றி வைத்திருக்கும் மல்லிகைப்பூவை தலையில் சூடி ஜிகு ஜிகு வென அந்த குடும்பத்தார் இரண்டாம் ஆட்டத்துக்கு கிளம்புவார்கள். திரையரங்கு முன்பாக ஆற்று மணலை கொட்டி வைத்திருப்பார்கள். குடும்பம் குடும்பமாக அந்த மணலில் உட்கார்ந்து கொள்வார்கள். வறு கடலை வண்டி, சோன் பப்டி வண்டி போன்றவை ஒரு மூலையில் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும். முதல் முறை வரும் போது மாப்பிள்ளைக்கு கவனிப்பு பலமாக இருக்கும். டிக்கெட் வாங்கி உள்ளே சென்றதும் ஃபேனுக்கு நேராக மாப்பிள்ளை, பெண் உட்காருமாரு பார்த்துக் கொள்வார்கள். நெருக்கமான காதல் காட்சிகளிலோ அல்லது பாடல் காட்சிகளிலோ மனைவியின் கையைச் சுரண்டி அச்சாரம் போடும் புது மாப்பிள்ளையும், வீட்டார் அடுத்தடுத்து உட்கார்ந்திருப்பதால் சங்கோஜத்துடன் முகத்தில் லேசான வெட்கச் சிரிப்புடன் நெளிந்து கொண்டே படம் பார்க்கும் புதுப் பெண்ணும் பேரழகு. இடைவேளையில் சூடான பஜ்ஜியுடன் டீ, பெண்களுக்கு கோன் ஐஸ் என வீட்டின் கடைக்குட்டிகள் வாங்கி வருவார்கள்.

பக்கத்து கிராமங்களில் இருந்து மணமான தம்பதிகள் குழந்தைகளுடன் சைக்கிளில் வருவார்கள். அந்த சைக்கிளை நிறுத்திவிட்டு டோக்கன் வாங்கிக் கொண்டு வரும் அந்த கணவன் தன் மனைவியிடம் சொல்லுவான் “ கணேசன் அருமையா நடிச்சிருக்கிருராம்மா, நேத்து அழுகாத பொம்ப
ளைகளே இல்லையாம். ஸ்டாண்ட்ல சொன்னாக” என்று.

மனைவியும் அதைக் கேட்டுக் கொண்டே ”ஆமாமா, வெக்கிலு அக்கா கூட மத்தியானம் தண்ணியெடுக்கும் போது சொன்னாங்க” என்றபடியே குழந்தையை தூக்கிக் கொண்டு தங்கப்பதக்கத்தை பார்க்கப் போவார்கள்.

நாடக காலத்தின் தொடச்சியாக வழங்கி வந்த பர்ஸ்ட் ஷோ, செகண்ட் ஷோ பதப் பிரயோகம் கான்கிரீட் தியேட்டர்கள் வந்த பின்னும் மாறவில்லை.

காலைக் காட்சி என்பது வேலையே இல்லாதவர்கள், பள்ளி, கல்லூரி கட் அடித்து வரும் மாணவர்கள் பார்ப்பது. மதியக் காட்சி என்பது வீட்டிலிருக்கும் பெண்கள் தங்கள் தெருப் பெண்களோடு பார்ப்பது. மாலைக் காட்சி என்பது வேலை பார்க்கும் ஆண்கள் தங்கள் செட்டோடு வந்து பார்ப்பது. செகண்ட் ஷோ தான் குடும்பத்தோடு பார்ப்பது.

ஒரு படத்தை எப்போது தூக்குவது என்பதை செகண்ட் ஷோ கூட்டத்தை அடிப்படையாக வைத்து தான் முடிவு செய்வார்கள். நேத்து 40 பேர் தான் வந்தாங்க, அதான் இன்னைக்கு படகோட்டிய போடச் சொல்லிட்டேன் போன்ற உரையாடல்கள் சகஜம்.

சில டீக்கடைகள், பெட்டிக்கடைகள் இந்த செகண்ட் ஷோ முடிந்து வரும் கூட்டத்துக்காகவே காத்திருக்கும்.

மதுரை, திண்டுக்கலில் இருந்து வாலிபர்கள் கோவைக்குச் செல்லும் போது இரண்டாம் ஆட்டம் பார்த்து விட்டு ஏறினால் காலையில் கோழி கூப்பிட சென்று விடலாம் என்று ஒரு கணக்கோடு படம் பார்க்க போவார்கள். லாட்ஜுகளில் தங்கியிருப்பவர்களுக்கு, அடுத்த நாள் கல்யாணத்துக்கு வந்து மண்டபங்களில் தங்கியிருப்பவர்களுக்கு நேரம் கடத்த உதவியதே இந்த செகண்ட் ஷோக்கள் தான்.

கால சுழற்சியின் விளைவாக இந்த செகண்ட் ஷோ பார்ப்பதற்கான காரணங்கள் அருகி வருவதால் இப்போதெல்லாம் கூட்டமே வருதில்லை. சமீபத்தில் மதுரை மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டத்தில் இதைப் பற்றிய பேச்சு வந்துள்ளது. மதுரை புற நகர் மாவட்டத்தில் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் எல்லோரும் பெரும்பாலும் செகண்ட் ஷோ நட்டத்தில் நடந்து வருவதாகவே சொல்லியிருக்கிறார்கள். ஒரு மனதாக இந்தக் காட்சியை நிறுத்தினால் ஆதரவு தருவதாக எல்லோரும் சொல்லியிருக்கிறார்கள்.

மனதுக்கு பிடித்த ஒவ்வொன்றாக வாழ்வில் இருந்து விலகிக் கொண்டிருக்கிறது. ஆனால் அதை ஈடு கட்டும் விதத்தில் புது வரவுகளும் இருப்பதால், டேக் இட் ஈஸி

3 comments:

செல்வம் said...

முரளி...

செகண்ட் ஷோ பெயர்க்காரணம் இன்று அறிந்து கொண்டேன். திருப்பூரில் மட்டும் சுமார் 100 படங்களை செகண்ட் ஷோவில் பார்த்திருப்பேன். காதில் எவ்வளவு ரத்தம் வந்தாலும் வெள்ளிக்கிழமை செகண்ட் ஷோ தவறியதேயில்லை திருமணத்திற்கு முன்பு. இந்த செய்தியைப் படித்தவுடன் மனதில் சின்ன வருத்தம் தோன்றத்தான் செய்தது.

முரளிகண்ணன் said...

வாங்க செல்வம். எப்படியிருக்கீங்க?

vijay said...

en sir romba nal alla kanom