April 18, 2016

மொஹிந்தர் அமர்நாத்

இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடிப்பதற்கு இப்போது கடுமையான போட்டி. ஒரு முறை அணியில் இடம்பிடித்து விட்டால் போதும், ஐபிஎல் ஏலத்தில் நல்ல தொகை கிடைக்கும். அவர்களின் சொந்த மாநிலத்தில் ஏராளமான விளம்பர வாய்ப்புகள் கிட்டும். ஏதாவது ஒரு மேட்சில் குறிப்பிடும்படி ஆடிவிட்டால் அரசியல் காரணங்களுக்காக அந்தந்த மாநில அரசுகள் வீட்டு மனை ஒதுக்கும். பின்னர் அகடமி ஏதாவது ஆரம்பிக்கலாம். அவ்வளவு ஏன் இந்தியா முழுவதும் உள்ள கல்லூரி,பள்ளி ஆண்டு/விளையாட்டு விழாக்களில் கலந்து கொண்டாலே ஒரு வசதியான வாழ்வை எட்டி விடலாம்.

ஆனால் 1970களில் இப்படி இல்லை. பட்டோடி,கவாஸ்கர் போன்ற சிலருக்கே விளம்பர வாய்ப்பு கிடைக்கும். 83 உலக்கோப்பையை வென்று கொடுத்த பின்னர் ஆனானப்பட்ட கபில்தேவுக்கே பாமோலிவ் ஷேவிங் கிரீம் விளம்பரம் தான் கிடைத்தது. பூஸ்ட் விளம்பரம்தான் கபில்தேவுக்கு விளம்பர உலகில் கிடைத்த அதிகபட்ச அங்கீகாரம். மிகவும் சிறப்பான ஆட்டத்திறனை வெளிக்காட்டினால் இங்கிலாந்து கவுண்டி போட்டிகளில் விளையாட வாய்ப்புக்கிடைக்கும். இப்போது ஐபிஎல்லில் விளையாடவரும் வெளிநாட்டு ஆட்டக்காரர்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவது போல் எல்லாம் தாங்கமாட்டார்கள். ஓரளவு சம்பளம்தான். இனப் பாகுபாடு வேறு வீர்ர்களின் ஓய்வறையில் இருக்கும்.

எனவே ஒரு கிரிக்கெட் வீரருக்கு கிரிக்கெட் வாரியம் நிர்ணயிக்கும் சம்பளம் மட்டுமே கிடைக்கும். அதுவும் போட்டிகளில் விளையாடும் நாட்களுக்கு மட்டும்தான். ஆண்டுக்கு அதிகபட்சம் 12 டெஸ்ட் போட்டிகள் நடந்த காலம் அது. 80க்குப் பின்னரே ஒருநாள் போட்டிகள் அதிகரித்தன. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா போன்ற வங்கிகளும், இந்தியன் ரயில்வே மற்றும் சில தொழிற்சாலைகளும் யாராவது ஒரு வீரரை தங்கள் நிறுவனத்தில் கௌரவ வேலை கொடுத்து குறிப்பிட்ட சம்பளம் கொடுப்பார்கள்.

எனவே வசதியான பின்புலத்தில் இருந்து வராத கிரிக்கெட் வீரர்கள் ஓய்வு பெற்றதும், கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்திப்பார்கள். அதனால் தான் கிரிக்கெட் வீரர் நலநிதி போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் கிடைக்கும் டிக்கெட் மற்றும் விளம்பர வருவாயில் இருந்து குறிப்பிட்ட சதவிகித தொகையைக் கொடுத்து போய் வா ராசா என்று அனுப்பிவிடுவார்கள்.

இது ஊடகங்களின் காலம். இப்போது ஒரு வீரர் ஏதாவது ஒரு மேட்சில் நன்றாக விளையாடிவிட்டாலே ஊடகங்களின் மூலம் எப்படியாவது பொதுமக்கள் வரை சென்று சேர்ந்து விடுகிறார். ஆனால் அப்போது டெஸ்ட் மேட்சுகளை எலைட் ஆடியன்ஸ் மட்டும் பார்ப்பார்கள். ரஞ்சி,துலிப் கோப்பை போட்டிகளை எல்லாம் ஸ்கோரர்கள் மட்டும்தான் பார்ப்பார்கள். பெரிய ஆட்டக்காரர்கள் ஆடினால் மட்டும் சுமாராக கூட்டம் வரும். அம்பயர்களுக்கு கொத்தனார்களுக்கு கொடுக்கும் அளவுக்குத்தான் சம்பளம் இருக்கும். அம்பயர்கள் பெரும்பாலும் ஆட்டோவில்தான் மேட்சுகளுக்கு வந்து இறங்குவார்கள். ஒருமுறை மும்பையில் போக்குவரத்து நெரிசலால் ஆட்டோ கிடைக்காமல் ஒரு அம்பயர் தாமதமாக வந்து அரைமணி நேரம் ஆட்டம் தாமதமாக ஆரம்பித்தது எல்லாம் உண்டு.

1970களில் இந்திய அணித்தேர்வு என்பது வெளிப்படையாக இருக்காது. ஒருவர் உயிரைக்கொடுத்து அபாரமாக ஒரு போட்டியில் ஆடினாலும் கூட அது கவனிக்கப்படாமல் போக ஏராளமான சாத்தியங்கள் உண்டு. கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுக்கு மட்டும்தான் இந்தியா முழுவதும் யார் யார் நன்றாக தற்போது விளையாடுகிறார்கள் என்பது தெரியும். ஆனால் அவர்கள் தங்களின் நலனுக்கு ஏற்பத்தான் அணியை தேர்வு செய்வார்கள். ஒவ்வொரு மாநிலத்திற்கும் இத்தனை பேர் என்ற கோட்டா சிஸ்டம் இருக்கும் (இப்பொழுதும்!!!!). கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் இருக்கும் மாநிலத்திற்கு கூடுதல் பிரதிநிதித்துவம் இருக்கும். சென்ற தொடரில் ஆடிய விதம், ரஞ்சி கோப்பை, துலிப் கோப்பை போட்டிகளில் ஆடியவிதம் போன்ற காரணிகள் தான் தேர்வுக்கு அடிப்படை என மக்கள் நம்புவார்கள். ஆனால் கிரிக்கெட் வாரியத்தில் வலுவான பிண்ணனி கொண்ட மாநிலத்தில் இருத்தல், தேர்வாளர்களுடனான தொடர்பு போன்ற காரணிகள்தான் தேர்வுக்கு முக்கிய அடிப்படையாக அங்கே இருக்கும்.

கிரிக்கெட் அணி அறிவித்தால் பொதுமக்கள் ஓஹோ இவர்கள்தான் நல்ல ஆட்டக்காரகள் போல என நம்பிக்கொள்வார்கள். அடுத்து வரப்போகும் ஆட்டங்களுக்கான அணித்தேர்வானது ஓரிரு வாரம் முன்னதாக ஒரு சுபயோக சுபதினத்தில் ராகுகாலம்,எமகண்டம் இல்லா காலை வேளையில் நடக்கும். இப்போது போல உடனே தொலைக்காட்சிகளில், இணையத்தில் அந்த செய்திகள் குறுக்கும் நெடுக்குமாக பளிச்சிடாது. மாலை ஆறுமணி அகில இந்திய வானொலி ஆங்கிலச் செய்தி அறிக்கையில் அணி விபரத்தை அறிவிப்பார்கள். தொலைபேசி/அலைபேசிகள் அதிகமாக இல்லாத காலம் வேறு, எனவே வாய்ப்புள்ள பெரும்பாலான கிரிக்கெட் வீர்ர்களும் அந்த நேரத்தில் தங்களின் அதிர்ஷ்டத்தை தெரிந்துகொள்ள வானொலிப் பெட்டிமுன் தவம் கிடப்பார்கள்.

அப்போது டெல்லி கிரிக்கெட் மைதானத்திலும் ஒருவர் அந்த நேரத்தில் உட்கார்ந்திருப்பார். செய்திகளில் அவர் பெயர் சொல்லப்பட்டாலும் சரி இல்லாமல் போனாலும் சரி, செய்தி முடிந்ததும் இருக்கும் வெளிச்சத்தைப் பொறுத்து வலைப்பயிற்சியில் ஈடுபட்டுவிட்டுத்தான் வீட்டிற்கு கிளம்புவார். அவர்தான் மொஹிந்தர் அமர்நாத். அவர்தான் இந்தியா வென்ற 1983 உலக கோப்பை அரை இறுதி மற்றும் இறுதிப்போட்டிகளின் ஆட்டநாயகன் மற்றும் தொடரின் நாயகன், அடித்த 11 சதங்களில் ஒன்பதை வெளிநாட்டு மைதானங்களில் அடித்தவர், சுதந்திரத்திற்கு பின்னரான இந்திய அணியின் முதல் கேப்டன் லாலா அமர்நாத்தின் மகன்.

அப்போதைய இந்திய ஆடுகளங்களில் ஒருவரின் முட்டிக்கு மேல் பந்து எழும்பியதாக கேள்விப்பட்டாலே அந்த ஆட்டக்காரர் மிகக் குள்ளமானவர் என்று பார்க்காமலேயே சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு, வீசப்படும் பந்தின் வேகத்தை உறிஞ்சிக்கொள்ளும் ஆடுகளங்கள் தான் அப்போது இருந்தன. அதற்கு நேர் எதிரானது ஆஸ்திரேலிய பெர்த் ஆடுகளம். வீசப்படும் பந்தின் வேகத்தை அதிகரிக்கும் கான்கிரீட் தளம். விக்கெட் கீப்பர்கள் எல்லாம் மற்ற மைதானங்களில் நிற்பதைவிட சற்று தூரம் தள்ளியே நிற்பார்கள். அவர்களை விடுங்கள். பீல்டர் முதல் ஸ்லிப்பில் நிற்கிறாரா இல்லை தேர்ட்மேனில் நிற்கிறாரா என குழப்பம் ஏற்படும் வகையில் தள்ளிளிளி நிற்பார்கள். இந்தியாவில் வேகப்பந்து வீச்சாளர் என்று கபில்தேவ் ஒருவர்தான் இருந்தார். மற்றவர்கள் எல்லாமே மீடியம்தான். இப்போது போல வேகப்பந்து வீச்சிற்கு வலைப்பயிற்சி அளிக்கும் இயந்திரங்களும் கிடையாது. இந்த சூழ்நிலையில் பழகுவதால்தான் முன்னாளைய இந்திய ஆட்டக்காரர்களின் திறமை வெளிநாடுகளில் பல்லிளித்தது.

இந்த சூழ்நிலையில், அப்போதைய ஏன் இன்றுவரைக்கும் எனக்கூட சொல்லலாம். அதிவேக பந்துவீச்சாளர் என அறியப்பட்ட ஆஸ்திரேலியாவின் ஜெஃப் தாம்சனை பெர்த ஆடுகளத்தில் சந்தித்து தன் முதல் சதத்தை அடித்தவர் மொஹிந்தர் அமர்நாத்.

இந்திய ஆட்டக்காரர்கள் வெளிநாடுகளுக்கு விளையாடச் சென்றாலே வைணவத்தின் முக்கிய தத்துவமான சரணாகதி, பாதாரவிந்தம் படிதலைத்தான் பின்பற்றுவார்கள். பந்து பிட்சின் மையத்தில் விழுந்தாலே கோவிந்தா எனச்சொல்லி உட்காந்து விடுவார்கள். ஆனால் மொஹிந்தர் அமர்நாத் அனாயாசமாக பவுன்சர்களை ஹூக் செய்து விளையாடுவார். நெஞ்சுக்கு வரும் பந்துகளை எளிதாக புல் செய்வார். அவர் நின்று கொண்டிருக்கும் ஸ்டைலைப் பார்த்தால் இவர் பந்துகளை எங்கே அடிக்கப்போகிறார் என்பது போலத்தான் தெரியும். அவ்வளவு சாத்வீகமாக பேட்டிங் கிரீஸில் நிற்பார். எல்கேஜி பையன்கள் மூக்குத்துடைக்க கர்ச்சீப்பை பாக்கெட்டின் வெளியே வைத்திருப்பது போல தன் சிகப்பு நிற கர்ச்சீப்பை பேண்ட் பாக்கெட்டில் வெளித்தெரியும் படி வைத்திருப்பார்.

80களின் ஆரம்பத்தில் அதிவேக பந்து வீச்சாளர்களாக விளங்கிய மால்கம் மார்ஷலும், இம்ரான்கானாலும் சிறந்த ஆட்டக்காரர் என புகழப்பட்டவர். தன் சகவயது ஆட்டக்காரர்களை புகழாத சுனில் கவாஸ்கராலேயே தனது சுயசரிதையில் உலகின் சிறந்த ஆட்டக்காரர்களில் ஒருவர் என புகழப்பட்டவர். அவ்வாறு வேகப்பந்தை சமாளித்து ஆடுவதாலேயே ஆஸ்திரேலியா,வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பாகிஸ்தான் ஆடுகளங்களில் அவரல் சிறப்பாக ஆட முடிந்தது. வேகப்பந்து வீச்சை மட்டுமல்ல, சுழற்பந்துகளையும் கணித்து ஆடுவதில் வல்லவர். பொதுவாக இந்திய அணி வீர்ர்கள் என்றாலே சுழலை அனாயாசமாக ஆடத்தான் செய்வார்கள். ஆனால் மொஹிந்தர் கால்களை நேர்த்தியாக நகர்த்தி, சிறப்பாக தடுத்து ஆடுவார். கால் பட்டைகளில் பந்தைத் தடுத்தல், இறங்கி அடித்து பயம்காட்டுதல், பார்வர்ட் ஷாட் லெக், சில்லி பாயிண்ட், சில்லி மிடாபில் அருகில் நிற்கும் பீல்டர்களை பயமுறுத்துமாறு பேட்டை வீசுதல் எல்லாம் இருக்காது. சுழலை நன்கு கவனித்து, காலை முன்னரோ, பின்னரோ நகர்த்தி மட்டையின் மையக் கோட்டில் பந்து படுமாறு ஆடுவார். அதுவும் மிகவும் மென்மையாக, பந்து பிட்சைவிட்டு வெளியேறிச் செல்லாத வகையில். அடுத்த பால் போடுப்பா பார்ப்போம் என்ற செய்தி பந்துவீச்சாளருக்கு போய்ச்சேரும். அருகில் இருக்கும் பீல்டர்கள் என்ன இது நமது கைக்குகூட பந்து வரவில்லையே என அலுத்துக் கொள்வார்கள். இவ்வாறு சுழற்பந்து வீசப்பட்டால் எதிர் அணியை சோர்வடையச் செய்வதில் மொஹிந்தர் சமர்த்தர். ஆனால் அடிக்க வேண்டிய பந்துகளை விளாசி விடுவார். சுழற்பந்துகளை பிரண்ட் புட் கவர்ட்ரைவ் ஆடுவது அவருக்கு மிக எளிது.

மொஹிந்தர் மித வேகம் என்று சொல்லமுடியாத வேண்டுமென்றால் மென்வேகப்பந்து வீச்சாளர் என்று சொல்லக்கூடிய அளவில் பந்தும் வீசக்கூடியவர். 83 உலக்கோப்பையில் அரை இறுதி, இறுதிப்போட்டி ஆட்டநாயகன் விருது அவரது பந்துவீச்சுக்காகவே முக்கியமாக வழங்கப்பட்டது. அவரது பந்துவீச்சு இங்கிலாந்து,நியூசிலாந்து போன்ற ஸ்விங்கிற்கு சாதகமான பருவநிலை நிலவும் நாடுகளில் நன்கு எடுபடும். இந்தியா போன்ற நாடுகளில் அவ்வளவாக எடுபடாது. ஆனால் அவர் பேட்ஸ்மனை கணித்து அதற்கேற்றார்போல கண்ட்ரோலாக பந்து வீசக்கூடியவர். பந்தை சிறப்பாக கட் செய்யக்கூடியவர். அதனால்தான் கபில்தேவும் மூன்று ஸ்பின்னர்களுமே பந்து வீச்சாளர்களாக இருந்த, இந்தியாவில் நடந்த பல டெஸ்ட் மேட்சுகளில் மொஹிந்தர் அமர்நாத் இரண்டாவது ஓவரை வீசுவார்.

பந்துவீச்சாளர்கள் பொதுவாக பந்துவீச ஆரம்பிக்கும்போது மெதுவாக ஓட ஆரம்பித்து கிரீஸுக்கு வந்து சேரும் போது முழுவேகத்தை அடைந்து பந்தை வீசுவார்கள். சிலர் அம்பயரின் இடுப்பளவுக்கு கூட மேலெழும்பி பந்தை ஆக்ரோஷமாக வீசுவார்கள். ஆனால் மொஹிந்தரோ தலைகீழ். மெதுவாக ஓட ஆரம்பித்து, வேகத்தை படிப்படியாகக் குறைத்துக் கொண்டே வந்து, கிரீஸை நெருங்கும் போது கிட்டத்தட்ட நின்று கொண்டு பந்தை வீசுவார். முதன்முதலாக அவர் பந்தை சந்திக்கும் பேட்ஸ்மென்கள் எதற்கு இவர் ஓடிவந்தார் என ஆச்சரியப்பட்டுக் கொண்டேதான் ஆடுவார்கள்.

அந்த காலகட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர்களை தைரியமாக எதிர்கொண்டு பல விழுப்புண்களை வாங்கியவர் மொஹிந்தர். ரிச்சர்ட் ஹேட்லி அவர் மண்டையை உடைத்தார், இம்ரான் மயக்கமடையச் செய்தார், மார்ஷல் அவர் பல்லை உடைத்தார், தாம்சன் அவர் முகவாயை பெயர்த்தார். ஆனாலும் ஹூக் ஷாட் ஆட தயங்கியதேயில்லை மொஹிந்தர்.

இவ்வளவு சிறப்பு இருந்தும் ஒவ்வொரு முறையும் அவர் அணிக்குத் தேர்வாவது நிச்சயமில்லாமலேயே இருக்கும். 1969ல் அவர் அணிக்குத்தேர்வானார். ஆனால் சில காலம் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதே போல 80களிலும் அவருக்கு வாய்ப்பு கண்ணாமூச்சியாகவே இருந்தது. வாய்ப்பு கிடைக்காவிட்டால் உள்நாட்டுப்போட்டிகளில் சிறப்பாக ஆடி, தன் திறமையை நிரூபித்து வேறு வழியில்லாமல் தேர்வாளர்களை தன்னை தேர்ந்தெடுக்கச் செய்து விடுவார். கிரிக்கெட் குடும்ப பாரம்பரியத்தில் வந்தும் அவருக்கு காட்பாதர் யாரும் இல்லை. அதற்கு காரணம் அவர் கேட்கும் நேர்மையான, நியாயமான கேள்விகள். அந்த நேர்மைக்குப் பயந்து அவரை ஒதுக்கி வைக்கவே பார்த்தது கிரிக்கெட் வாரியம். கடைசியாக அவர் கிரிக்கெட் வாரியத்தைப் பற்றி சொன்ன ”முட்டாள்களின் கூடாரம்” என்ற வார்த்தைப் பிரயோகம் அவருக்கு கதவுகளை நிரந்தரமாக மூடியது.

இந்திய அணியின் பீனிக்ஸ் பறவை என்று வர்ணிக்கப்பட்ட மொஹிந்தரின் கிரிக்கெட் கேரியர் சொல்வது ஒன்றுதான்.
நீங்கள் பணிபுரியும் இடத்தில், உங்கள் வளைந்து போகா தன்மைக்காகவும், நேர்மையான கேள்விகளுக்காகவும் எந்த முக்கிய குழுவிலும் இடம் கிடைக்காவிட்டால் சோர்ந்து போகாதீர்கள். உங்கள் திறமையை தொடர்ந்து நிரூபித்துக் கொண்டே இருங்கள். வேறு வழியில்லாமல் உங்களை அவர்கள் தேர்வு செய்தே ஆக வேண்டிய கட்டாயத்தை உருவாக்குங்கள் என்பதுதான்.

No comments: